Published : 15 Feb 2019 08:28 AM
Last Updated : 15 Feb 2019 08:28 AM

ஆந்திரா, தெலங்கானாவில் கட்சி தாவல் தீவிரம்

ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்தில் கட்சித் தாவும் படலம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே, எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 18 எம்.எல்.ஏக்கள் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இதில் 2 பேர் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சித் தாவும் படலம் மீண்டும் தொடங்கி உள்ளது. குறிப்பாக தெலுங்கு தேச கட்சியிலிருந்து, ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர். சமீபத்தில், தெலுங்கு தேச கட்சியின் கொறடாவான மேடா மல்லிகார்ஜுனா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரை தொடர்ந்து, சீராலா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த கிருஷ்ண மோகன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.

இந்நிலையில், அனகாபல்லி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவருமான அவந்தி ஸ்ரீநிவாஸ், நேற்று மாலை ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில், அக்கட்சியில் சேர்ந்தார். இதேபோன்று, தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து டிஆர்எஸ் கட்சிக்கு பலர் மாறி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான ரேணுகா சவுத்தரி கூட, இம்முறை கம்மம் தொகுதியில் ‘சீட்’ கொடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக நேரிடும் என அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x