

புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை ஏற்கனவே மத்திய அரசு ரத்து செய்த நிலையில், நேற்று இரவு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3 ஆயிரத்து 482.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு பழங்கள், சிமென்ட்இறக்குமதி செய்யப்படுகின்றன. பழங்களுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை தற்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதேபோல், சிமென்ட்டுக்கு 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இறக்குமதி வரியைக் கடுமையாக உயர்த்தியிருப்பது, பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏறக்குறையத் தடை விதித்தற்கு ஒப்பாகும் என மத்தியஅரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி இருந்த " வர்த்தக நட்பு நாடு' என்ற சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200 சதவீதமா அதிகரிக்கப்பட்டுள்ளது. " எனத் தெரிவித்துள்ளார்.