Published : 28 Feb 2019 11:55 AM
Last Updated : 28 Feb 2019 11:55 AM
இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இருநாடுகளிடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தன் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அவரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் இந்தியாவுக்கு இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் இன்று திடீரென அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர், கராச்சி நகரங்கள் வரை இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது. இருநாடுகளிடையே நட்பை குறிக்கும் வகையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழகளில் இந்த ரயில் இயக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கராச்சியில் இருந்து இன்று புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் வரையில் வந்தது. அந்த ரயிலில் இந்தியாவுக்கு வருகை தருவதற்காக 16 பயணிகள் மட்டும் அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இந்தியா செல்லும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டு பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT