Published : 13 Feb 2019 04:39 PM
Last Updated : 13 Feb 2019 04:39 PM

ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: பிறந்தநாள் நிகழ்ச்சியில் தமிழக மாணவியை பலாத்காரம் செய்த ஆந்திரா பொறியாளர் கைது

தனது ஃபேஸ்புக் நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு வந்த தமிழக மாணவியைப் பலாத்காரம் செய்த அறைத் தோழரும் பொறியாளருமான ஆந்திர இளைஞரைப் பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

தமிழகத்தைச் சேர்ந்த 24 வயது எம்பிஏ மாணவி பெங்களூருவில் தங்கிப் படித்துவந்தார். அவரின் ஃபேஸ்புக் நண்பரான ஆரிஃப் என்பவரின் பிறந்தநாள் வந்தது. இந்நிலையில் விழாவை நண்பர்கள் பலர் சேர்ந்து கொண்டாட முடிவெடுத்தனர்.

 

டோடனேக்கண்டி பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் ஆரிஃப்பின் அறைத்தோழர் கே.ஆதித்யாவும் கலந்துகொண்டார்.

 

விழாவில் ஆதித்யா மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்துள்ளார். மயக்கமடைந்த மாணவி பெட்ரூமில் படுத்து உறங்கியுள்ளார். மற்றவர்கள் உணவு வாங்கிவர வெளியே சென்றனர். ஆதித்யாவும் மாணவியும் மட்டும் தனித்துவிடப்பட்டனர். இந்நிலையில் உள்ளே நுழைந்த ஆதித்யா, மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மது அருந்திய நிலையில் இருந்ததால், தன்னால் ஆதித்யாவைத் தடுக்கமுடியவில்லை என்று மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதனையடுத்து எச்ஏஎல் காவல் நிலையத்தில் ஆதித்யாவின் மீது மாணவி புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு உண்மையைக் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து ஆதித்யா கைது செய்யப்பட்டார்.

 

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலைச் சேர்ந்த ஆதித்யா, மரத்தஹள்ளியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார். ஆரிஃப் மற்றும் ஆதித்யாவின் தொடர்ச்சியான வேண்டுகோள்களை அடுத்து புகாரைத் திரும்பப் பெற முடிவெடுத்தார் மாணவி. ஆனால் காவல்துறை அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x