Published : 11 Feb 2019 03:04 PM
Last Updated : 11 Feb 2019 03:04 PM
லக்னோவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தனர்.
பிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார். மேலும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் கிழக்கு பகுதியின் நிர்வாகப் பொறுப்பையும் வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், உ.பி. காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்.
இவர்களில் பலரும், உ.பி.யில் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள். காங்கிரஸில் இருந்து மற்ற கட்சிகளுக்கு தாவிய சிலரை பிரியங்கா உத்தரவின்பேரில், உ.பி.யின் சில முக்கிய தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்களை காங்கிரஸுக்கு திரும்பும்படியும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் காங்கிரஸூக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, உத்தரபிரதேச தலைநர் லக்னோவில் காங்கிரஸ் சார்பில் வாகனப் பேரணி நடைபெற்றது.
பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்றொரு தேசிய பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதில் கலந்து கொண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் கூடி நின்று பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களை நோக்கி கை அசைத்தபடி வந்த ராகுல், திடீரென ரபேல் போர் விமான படத்தை எடுத்து தொண்டர்களிடம் காட்டியதும், அவர்கள் ஆரவாரம் செய்தனர். அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT