Published : 01 Feb 2019 09:27 AM
Last Updated : 01 Feb 2019 09:27 AM

இன்று முதல் அமல்: விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் திட்டம்: டிராய் அறிவிப்பு

நாடுமுழுவதும் டிஜிட்டல் டி.வி. வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் அளித்துப் பார்க்கும் புதிய கட்டணமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய நடைமுறையால், 17 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எந்தவிதமான இடையூறையும் சந்திக்கமாட்டார்கள் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்போது கேபிள் அல்லது டிடிஎச் மூலம் குறிப்பிட்ட சேனல்கள் தொகுப்பாக வழங்கப்படுகின்றன. அதில் நமக்கு தேவைப்படாத சில சேனல்கள் இருந்தாலும் அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்துகிறோம். இந்நிலையில் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம் செலுத்தி பார்க்கும் முறை அமல்படுத்தப்படும் என டிராய் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, தங்களுக்கு விருப்பமான சேனல்கள் பட்டியலை கேபிள் டிவி சேவை அல்லது டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனத்திடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் வழங்குமாறு அறிவித்திருந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ரூ.153.40 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். அதேநேரம், இந்த குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்.டி. தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது.

இதுகுறித்து தி இந்துவிடம்(ஆங்கிலம்), டிராய் செயலாளர் எஸ்.கே.குப்தா கூறுகையில், " டிராய் புதிய கட்டண விதிமுறையின் கீழ் புதன்கிழமை வரை 10 கோடிக்கும் அதிகமான, அதாவது 62 சதவீதம் கேபிள்டிவி வாடிக்கையாளர்கள், 7 கோடிக்கும் அதிகமான டிடிஎச் வாடிக்கையாளர்கள் அதாவது 30 சதவீதம் பேர் தங்களுக்கு விருப்பமான சேனல்களை பதிவு செய்துள்ளனர். ஆதலால், சேனல்களை வாடிக்கையாளர்கள் பார்ப்பதில் எந்தவிதமான இடையூறும் இருக்காது என நம்புகிறேன்.

டிடிஎச் ஆப்ரேட்டர்கள் இதற்குமுன் ப்ரீபெய்ட் மாடலில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை அளித்துவந்தனர். ஆனால், புதிய கட்டண விதிமுறையின் கீழ் வாடிக்கையாளர்கள் கேட்கும் விஷயங்களை அளிக்க வேண்டும். டிடிஎச் சேவைதாரர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இருக்காது. கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு இடையூறு இன்றி சேவை கிடைக்கத் தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

புதிய விதிமுறையின் படி வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் பணம் கொடுத்துப் பார்க்கலாம். அதேசமயம், இலவசமாக வரும் 100 சேனல்களுக்கு கட்டணமாக 130 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக ரூ.19க்குமேல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான குறுஞ்செய்தியை வாடிக்கையாளர்களுக்கு டிராய் அனுப்பி வருகிறது. அதில் பல்வேறு சேனல்களின் கட்டண விவரங்கள் அடங்கிய இணைப்பும் இடம்பெற்றுள்ளது. டிராயின் இந்த நடவடிக்கையால் பார்க்காத சேனல்களுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இனி இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x