Published : 28 Feb 2019 01:58 PM
Last Updated : 28 Feb 2019 01:58 PM
இந்தியா ஒன்றாக வாழும்; ஒன்றாக வளரும்; ஒன்றாகப் போரிட்டு ஒன்றாகவே வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக நேற்று, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதனிடையே மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக இளைஞர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, நிகழ்ச்சியை பாதியில் ரத்து செய்துவிட்டு, ஆலோசனையில் பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று பாஜக பூத் பொறுப்பாளர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர், ''எதிரி (பாகிஸ்தான்) நம்மை நிலைகுலைய வைக்க முயற்சிக்கிறான். தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் நமது வளர்ச்சியைத் தடுக்க ஆசைப்படுகிறார்கள். நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் அவர்களின் கொடிய திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
நாம் அனைத்துத் துறைகளிலும் கடினமாக உழைக்க வேண்டும். நம் தேசத்தைக் காப்பவர்கள் அனைவரிடமும் இந்தியா நன்றியுடன் இருக்கிறது. அவர்கள் அங்கிருப்பதால்தான், தேசம் அதிவேக வளர்ச்சியை அடைய முடிகிறது.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2014 வெற்றி பயன்பட்டது. 2019 தேர்தல் வெற்றி (பாஜகவின்) மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக இருக்கும்'' என்றார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT