Published : 08 Feb 2019 05:20 PM
Last Updated : 08 Feb 2019 05:20 PM

யானை சிலைகளுக்காக செலவழித்த தொகையை மாயாவதியே உ.பி., அரசுக்கு செலுத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பார்வை

யானை சிலைகளுக்காக செலவழித்த தொகையை மாயாவதி அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தாங்கள் நினைப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்தபோது மாயாவதி அம்மாநிலத்தில் லக்னோ மற்றும் நொய்டா நகரங்களில் யானை சிலைகளை நிறுவினார்.

இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. யானை சிலைதான் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமும்கூட. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தல் வரும்போதெல்லாம் யானை சிலைகளை மறைக்கும்படி உத்தரவிடுவது வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ரவி காந்த் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், "பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் மாயாவதி (அப்போதைய முதல்வர்) தனது சொந்த செல்வாக்கை வளர்க்க முயற்சித்துள்ளார்.

2008-2009 உ.பி. பட்ஜெட், 2009-2010 உ.பி. பட்ஜெட்டில் ரூ.2000 கோடி வரை இவ்வாறு பொது இடங்களில் யானை சிலைகளையும், தனது சிலைகளையும் நிறுவியிருக்கிறார்.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 14-க்கு எதிராக இந்த நடவடிக்கை உள்ளது. ரூ.52.20 கோடி செலவில் 60 யானை சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பொது இடத்தில் நிறுவப்பட்ட இத்தகைய சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மாநில அரசு அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கானா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ரஞ்சன் கோகோய்,  இந்த வழக்கைப் பொருத்தவரை இப்போதைக்கு எங்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. பொதுமக்கள் வரிப்பணத்தை செலவழித்து தனது சிலைகளையும் தனது கட்சியின் யானை சின்னத்தையும் வடித்து மாநிலம் முழுவதும் நிறுவிய மாயாவதி அரசு கருவூலத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது" என்றார்.

இதனையடுத்து வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x