Published : 21 Jan 2019 12:14 PM
Last Updated : 21 Jan 2019 12:14 PM
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தன்னுடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்துள்ளார்.
மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருவரும் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டுக்குத் தப்பியோடினர். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுக்கவேண்டும் என்றுகூறி நாட்டைவிட்டு வெளியேறினார் மெகுல் சோக்சி.
இதைத்தொடர்ந்து ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் சரணடைந்தார் சோக்சி. 2018-ல் அங்கேயே குடியுரிமையும் பெற்றார். கடந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அந்நாட்டின் உறுதிமொழியையும் ஏற்றார். சில நாட்களில், அதாவது ஜனவரி 29-ம் தேதி, சிபிஐ அவர் மீதும் நீரவ் மோடி மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இதனையடுத்து மெகுல் சோக்சிக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன. பாஸ்போர்ட்டை முடக்கி அவர் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யும் உத்தரவைப் பெறுவதற்கான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் மெகுல் சோக்சியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரைக் கைது செய்து, ஒப்படைக்க வாய்ப்பு ஏற்பட்டது.
இதில் இருந்து தப்பிப்பதற்காக ஆன்டிகுவா நாட்டில் தனது இந்திய குடியுரிமையைத் துறந்தார் சோக்சி. அத்துடன் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்தார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்கவே மெகுல் சோக்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT