Published : 04 Jan 2019 11:40 AM
Last Updated : 04 Jan 2019 11:40 AM
அயோத்தி நில விவகார வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு எப்போது விசாரணையைத் தொடங்கும் என்பது குறித்து வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
உ.பி.யில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தன.
இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்பின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றுவிட்டார்.
அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வரும் ஜனவரி 4-ம் தேதி விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.கே. கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கவுல் கூறுகையில், “ அயோத்தி நில விவகார வழக்கில் எந்த அமர்வு எப்போது தனது விசாரணையைத் தொடங்கும் என்பது குறித்த தேதியை வரும் 10-ம் தேதி அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
பல்வேறு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஸ் சால்வே, ராஜீவ் தவான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். ஆனால், 30 வினாடிகளில் தங்களின்உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT