

அயோத்தி நில விவகார வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு எப்போது விசாரணையைத் தொடங்கும் என்பது குறித்து வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
உ.பி.யில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தன.
இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்பின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றுவிட்டார்.
அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வரும் ஜனவரி 4-ம் தேதி விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.கே. கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கவுல் கூறுகையில், “ அயோத்தி நில விவகார வழக்கில் எந்த அமர்வு எப்போது தனது விசாரணையைத் தொடங்கும் என்பது குறித்த தேதியை வரும் 10-ம் தேதி அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
பல்வேறு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஸ் சால்வே, ராஜீவ் தவான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். ஆனால், 30 வினாடிகளில் தங்களின்உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துவிட்டனர்.