Last Updated : 12 Jan, 2019 08:27 AM

 

Published : 12 Jan 2019 08:27 AM
Last Updated : 12 Jan 2019 08:27 AM

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் செல்வதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

இந்தியாவால் பயன்படுத்தப்படாத நதி நீர் பாகிஸ்தான் செல்வதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மேல் யமுனை முகத்துவாரப் பகுதியில் ரேணுகாஜி பல்நோக்கு அணைத் திட்டம் அமைப்பது தொடர்பாக 6 மாநிலங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் பிரயாக்ராஜ் நகரில் நமாமி கங்கை திட்டம், தேசிய கங்கை நதி தூய்மைப்படுத்துதல் இயக்கத்துக்காக ஒன்-சிட்டி-ஒன்-ஆப்பரேட்டர் திட்டம் ஆகியவை தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, “நமது நாட்டில் ஏராளமான நதிநீர் ஆதாரம் உள்ளது. ஆனால் நம்மிடையே சிறப்பான நீர் நிர்வாகம் இல்லை என்பதுதான் உண்மையான பிரச்சினையாக உள்ளது.

சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கென ஒதுக்கப்பட்ட சில நதிகளில் பாயும் நீரைப் பயன்படுத்தலாம். நாம் பயன்படுத்திய பின்னர் அந்த நதிகளில் ஏராளமான நீர், பாகிஸ்தானுக்கு செல்கிறது. அந்த நதிகளில் பாகிஸ்தானுக்குச் செல்லும் உபரி நீரை நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்கும்.

இந்த நீரை பஞ்சாப், ஹரியாணா, உ.பி., ராஜஸ்தான், டெல்லி மாநிலங்கள் பெற்று பயனடையும்” என்றார்.

சிந்து நதி ஒப்பந்தத்தின்படி சிந்துவின் கிளை நதிகளான சட்லெஜ், பியாஸ், ராவி நதிகள் இந்தியாவுக்கும், சீனாப், ஜீலம், சிந்து நதிகள் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நதிகளில் பாயும் நீரை அந்தந்த நாடுகள் பயன்படுத்தலாம் என்பதே ஒப்பந்த ஷரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x