Last Updated : 14 Jan, 2019 03:30 PM

 

Published : 14 Jan 2019 03:30 PM
Last Updated : 14 Jan 2019 03:30 PM

என்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை சென்றனர்: குமாரசாமி விளக்கம்

என்னிடம் சொல்லிவிட்டுதான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பை சென்றனர் என்று விளக்கம் அளித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியைக் கலைக்க நடக்கும் குதிரைபேரத்துக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவர் இரையாகிவிட்டதாக தகவல் எழுந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவர் விமானத்தில் பாஜக நிர்வாகிகளுடன் மும்பை சென்றதாக வெளியான தகவலால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் எழுந்தது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குமாரசாமி, "மூன்று எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்.

என்னிடம் சொல்லிவிட்டுதான் அவர்கள் மும்பை சென்றனர். எனது அரசாங்கத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாஜக யாரை எல்லாம் வளைக்க நினைக்கிறது என்பது எனக்குத் தெரியும். எதைக் காட்டி பேரம் பேசுகிறது என்றும் தெரியும். நான் இவற்றை சமாளித்துவிடுவேன். ஊடகங்களுக்கு ஏன் இந்த அக்கறை" எனப் பேசினார்.

முன்னதாக கர்நாடகா துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.  எம்எல்ஏக்களிடம் குதிரைபேரம் பேசப்பட்ட சர்ச்சை தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்று கூறப்பட்டாலும் பரமேஸ்வர் தரப்பிலோ இது பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் என்று கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x