Last Updated : 28 Jan, 2019 09:56 AM

 

Published : 28 Jan 2019 09:56 AM
Last Updated : 28 Jan 2019 09:56 AM

நிறைவேற்றகூடிய வாக்குறுதியை மட்டும் மக்களிடம் அரசியல்வாதிகள் அளியுங்கள்: நிதின் கட்கரி பேச்சுக்கு காங்கிரஸ் கிண்டல்

நிறைவேற்றக் கூடிய வாக்குறுதியை மட்டும் மக்களிடம் அரசியல்வாதிகள் அளிக்க வேண்டும், இல்லாவிட்டால், மக்களால் தூக்கி எறியப்படுவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆனால், நிதின் கட்கரியின் இந்த எச்சரிக்கை பிரதமர் மோடிக்குத்தானே என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

மும்பையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், " அரசியல்வாதிகள் 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அளிக்க  வேண்டும். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பமாட்டார்கள், மாறாக தண்டித்துவிடுவார்கள். ஆதலால், 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு வழங்க வேண்டும். நான் மக்களிடம் எந்தவிதமான பொய்யான வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. நான் கூறியதை 100 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறேன். நான்  கட்த 1994-99 பாஜக-சிவசேனா கூட்டணியில் மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்தபோது கூட எந்த வாக்குறுதியும் மிகைப்படுத்தி அளிக்கவில்லை. நான் அளித்தவாக்குறியை நிறைவேற்றியுள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும்" எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சியும், ஓவைசி எம்.பி.யும் கிண்டல் செய்துள்ளார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறுகையில், " மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியை தாக்கிப் பேசியுள்ளார். மோடி மக்கள் உங்களை சந்திக்க வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதின் கட்கரி ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், " 2014-ம் ஆண்டு தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தோம். ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நினைத்துப்பார்க்கவில்லை " எனத் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு சர்ச்சையானதையடுத்து, அதற்கு கட்கரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x