Last Updated : 20 Sep, 2014 01:41 PM

 

Published : 20 Sep 2014 01:41 PM
Last Updated : 20 Sep 2014 01:41 PM

ஓர் இந்திய முஸ்லிமாக மோடி கருத்தை வரவேற்கிறேன்: கோவா காங்கிரஸ் தலைவர்

ஓர் இந்திய முஸ்லிமாக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வரவேற்பதாக கோவா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், "இந்திய முஸ்லிம்கள் நாம் ஆட்டுவிக்கும்படி ஆடுவார்கள் என்று தீவிரவாத அமைப்பினர் நினைத்தால், அவர்கள் ஏமாற்றம்தான் அடை வார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களாக வாழ்வார்கள். அவர்கள் இந்தியாவுக்காக உயிரையும் கொடுப்பார்கள். நாட்டுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்" என்றார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அம்மாநில உருது அகாதமி தலைவருமான உர்ஃபான் முல்லா, "ஓர் இந்திய முஸ்லிமாக மோடி கருத்தை வரவேற்கிறேன்" என கூறியுள்ளார்.

அதேவேளையில், மோடியை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. அண்மையில் வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் மோடிக்கு முஸ்லிம்கள் மதிப்பை உணர்த்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

"இந்திய முஸ்லிம்களின் மதிப்பை இடைத் தேர்தலின் முடிவில் மோடி உணர்ந்துவிட்டார். மோடி அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களுக்கு இந்திய முஸ்லிம்களின் மதிப்பை விளக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பலரும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை தங்களது இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் திணித்தனர்" என்றார்.

உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த சமாஜ்வாதி கட்சி, இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x