Last Updated : 26 Jan, 2019 10:53 AM

 

Published : 26 Jan 2019 10:53 AM
Last Updated : 26 Jan 2019 10:53 AM

அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் தேசியக் கொடி யாத்திரை நடத்திய மாணவர்களுக்கு நோட்டீஸ்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அனுமதியின்றி தேசியக் கொடி யாத்திரை நடத்திய மாணவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலிகர் தொகுதியின் பாஜக எம்.பி. பல்கலை நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பல்கலைகழகமான இது உ.பி.யின் அலிகர் நகரில் அமைந்துள்ளது.  அலிகர் பல்கலைகழகம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வழக்கமாக உள்ளது.

இருதினங்களுக்கு முன் அதன் வளாகத்தில் சட்டத்துறையின் மாணவரும் அகில பாரதி வித்யா பரிஷத்தின் தலைவருமான அஜய்சிங் தேசியக் கொடி ஊர்வலம் நடத்தினார். இருசக்கர வாகங்களில் நடைபெற்றதன் மீது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதற்காக அஜய் சிங் உள்ளிட்ட இரண்டு மாணவர்களுக்கு நிர்வாகம் அளித்த நோட்டீஸில், ''வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தால் மாணவர்கள் அதை விட்டு வெளியே வரவேண்டியதாயிற்று. சமூக விரோதிகள் உட்பட வெளியாரும் அதில் கலந்து கொண்டனர்'' எனக் குறிப்பிட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அஜய்சிங் கூறும்போது, ''அனுமதி கோரி நிர்வாகத்திற்கு அளித்த கடிதத்திற்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைக்காததால் ஊர்வலத்திற்கு அனுமதி கிடைத்ததாகத் தானே அர்த்தம் ஆகும்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு நோட்டீஸ் அளித்த பல்கலை நிர்வாகத்தை பாஜக எம்.பி. சதீஷ் கவுதம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை நிர்வாகம் வாபஸ் பெறவில்லை எனில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நிர்வாகம், தேசியக் கொடி யாத்திரை நடத்துவது ஆதரிக்கப்பட வேண்டிய செயல் எனவும், ஆனால் மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டி வன்முறை நோக்கத்துடன் அதை செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், அலிகரின் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளும் அஜய் சிங்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். நோட்டீஸை வாபஸ் பெறவில்லை எனில் அன்றாடம் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து தேசியக் கொடி ஊர்வலம் நடத்த இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இரண்டு உயிர்கள் பலி

அலிகருக்கு அருகிலுள்ள நகரமான காஸ்கன்சில் கடந்த வருடம் ஜனவரி 26-ல் தேசியக் கொடி ஊர்வலம் அனுமதியின்றி நடைபெற்றது. இது முஸ்லிம்கள் பகுதியில் நுழைந்த போது நிகழ்ந்த மோதலால் மதக்கலவரம் ஏற்பட்டு 2 உயிர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x