Last Updated : 04 Jan, 2019 10:30 AM

 

Published : 04 Jan 2019 10:30 AM
Last Updated : 04 Jan 2019 10:30 AM

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் ராஜினாமா

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மூத்த தலைவர் அஜய் மக்கான் இன்று ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், மாநிலப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ஆகியோரை நேற்று மாலை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று காலை தனது ராஜினாமா முடிவை அஜய் மக்கான் அறிவித்துள்ளார். தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மக்கான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீரென அஜய் மக்கான் காங்கிரஸ் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்பினாலும், அவருக்குத் தேர்தல் தொடர்பான முக்கியப் பொறுப்புகளை வழங்கவே இந்த முடிவை காங்கிரஸ் தலைமை செய்யக் கோரியது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அஜய் மக்கான் ஏற்றார். 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் படுதோல்வியைச் சந்தித்தார். ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் அஜய் மக்கான் வகித்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து அஜய் மக்கான் இன்று ட்விட்டரில் கூறுகையில், ''2015-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் நான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றேன். எனக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அன்பான வரவேற்பு இருந்தது. பேரன்பைப் பொழிந்தனர். கடினமான நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் என்னுடன் இருந்தனர். அனைவருக்கும் நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியுடன் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படும் நிலையில், அதை வெளிப்படையாக எதிர்த்து வந்தவர் அஜய் மக்கான் என்பது குறிப்பிடத்தகக்து. இந்த சூழலில அவர் ராஜினாமா நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x