Last Updated : 23 Jan, 2019 04:32 PM

 

Published : 23 Jan 2019 04:32 PM
Last Updated : 23 Jan 2019 04:32 PM

முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்’: பிரியங்காவுக்கு பதவி குறித்து ராகுல் காந்தி திட்டவட்டம்

பிரியங்கா வதேரா தீவிர அரசியலில் இறங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுவரை முழுநேர அரசியலில் ஈடுபடாமல் அவ்வப்போது ரேபரேலி, அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், முதல் முறையாக காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வ பதவி பிரியங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

47 வயதாகும் பிரியங்கா  தீவிர அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 1999-ம் ஆண்டு தொழிலதிபர் ராபர்ட் வதேராவைத்  திருமணம் செய்தபின் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தார்.

கடந்த 1980-களில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய இடங்களைத் தரும் மாநிலமாக இருந்து வருகிறது. இதனால், தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப்பிரதேசம் ரேபரேலி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா காந்தி ஈடுபட்டுவந்தார். மற்றவகையில் தீவிரமான அரசியலில் அவர் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு ஒரேமாதிரி இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தில் இந்த மூவரும் கூட்டணி அமைத்து போட்டியிடத் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்ட பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன.

இதனால் தனியாக உ.பி. மாநிலத்தில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சிய ஆயத்தமாகி வருகிறது. இது சிக்கலான காலகட்டம்தான் என்கிறபோதும், தங்களின் பாரம்பரிய தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் பிரியங்காவை களமிறங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி

தற்போது அமேதி தொகுதியில் இரு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் , பிரியங்கா அரசியல் வருகை குறித்து நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

சித்தாந்தங்களுடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தில் போரிடுகிறது. எந்த இடத்திலும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த காலை பின்வைக்காது, தொடர்ந்து முன்னேறிக்கொண்டேதான் செல்லும். நாங்கள் கொள்கைகளுக்காக போரிடுகிறோம்.

பிரியங்கா, ஜோதிர்தியா சிந்தியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் வலிமையான தலைவர்கள். இந்த இரு இளம் தலைவர்களும் உ.பி. காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் அவசியமானவர்கள்.

பிரியங்கா தேர்தலில் போட்டியிடும் விருப்பம் அவரைப் பொறுத்தது. என்னுடைய நோக்கம் எல்லாம் நாம் எந்த இடத்திலும் முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது. அது குஜராத்தாக இருந்தாலும் சரி, உத்தரப்பிரதேசமாக இருந்தாலும் சரி. நாம் மக்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் அரசியல் செய்கிறோம், எங்கெல்லாம் நமக்கு வாய்ப்பு இருக்கிறோ அங்கெல்லாம் நம்முடைய தடத்தை பதித்து முன்நோக்கிச் செல்ல வேண்டும்.

பிரியங்கா, சிந்தியா இருவரையும் உ.பி,யில் காங்கிரஸ் கட்சியின் உண்மையான கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் போராட அனுப்பி இருக்கிறேன். ஏழை மக்கள், நலிந்த பிரிவினர் என அனைவருக்கும் வளர்ச்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் சித்தாந்தம். அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. உ.பி.க்கு இப்போது இளைஞர்கள் சக்தி தேவை, அதை காங்கிரஸ் கட்சி வழங்கும்.

புதிய விதமான சிந்தனைகளையும், நேர்மறையான மாற்றங்களையும் உ.பி. அரசியலில் இருவரும் கொண்டுவருவார்கள். தனிப்பட்ட முறையில் என்னுடைய சகோதரி அரசியலில் தீவிரமாக இறங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. கடினமாக உழைக்கும் அளவுக்கு அவருக்குத்திறமை இருக்கிறது, என்னுடன் இணைந்து பணியாற்றுவார், உதவியாக இருப்பார். ஜோதிர்தியா துடிப்பு மிக்க தலைவர்.

உ.பி.யில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் இணைந்திருப்பது எந்தவிதத்திலும் எங்களைப் பாதிக்காது. அவர்கள் இருவர் மீதும் முழு மரியாதை இருக்கிறது. எங்கள் மூவரின் நோக்கமே பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மற்றவகையில் எங்களுக்குள் எந்தவிதமான விரோதமும் இல்லை. ஆனால், நாங்கள் மூவரும் தனித்தனியாக தங்களுடைய கொள்கைகள், சித்தாந்தங்களுக்காகப் போராடுவோம். ஆதலால், உ.பியில் எங்களின் போர் தீவிரமாக இருக்கும்.

பாஜகவைத் தோற்கடிக்க, தேவைப்பட்டால், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் இணக்கமாகச் செல்லத் தயாராக இருக்கிறோம். எங்களுக்குள் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன.

உ.பி. மாநிலத்தை முதலிடத்துக்குக் கொண்டுவர வேண்டும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம். உ.பி. மாநிலத்தைச்சேர்ந்த இளைஞருக்கு தங்கள் மாநிலம் எப்படி ஆளப்படுகிறது என்பது தெரியும், ஊழல் எவ்வாறு இருக்கிறது என்பது புரியும். இளைஞர்களுடன் இணைந்து அவர்களின் கனவுகளை நனவாக்கப் பாடுபடுவோம்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x