Published : 07 Jan 2019 03:29 PM
Last Updated : 07 Jan 2019 03:29 PM

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரி வழக்கு: உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆதார் எண்ணைப் பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இணைப்பதற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. நேற்றுகூட ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட உள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

ஆதார் எண் இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று இந்த வழக்கில் ஒரு குறிப்பிட்டவற்றில் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும் இணைப்பதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க உத்தரவிட வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் காரணமாக தேர்தலில் போலி வாக்குகள் பதிவாவதை முழுமையாகத் தடுக்க முடியும். இதனால் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அஸ்வினி உபாத்யாயா இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று முறையிட்டார்.

முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு ஏற்கப்பட்டால் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x