Published : 11 Apr 2018 08:33 AM
Last Updated : 11 Apr 2018 08:33 AM
“மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார். அதற்கேற்ப அரசமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். போதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், இந்தூரில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியது. இதற்கு விரிவான பதிலை அளித்துள்ளோம்.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆணையம் தயாராக உள்ளது. அதற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும். இவற்றை பூர்த்தி செய்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. எனினும் இதுதொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராவத், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது என்றார்.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT