Published : 29 Jan 2019 11:51 AM
Last Updated : 29 Jan 2019 11:51 AM
சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதி மன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்க வேல் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப் பட்டதை எதிர்த்தும், சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது பொன்மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீஸார் சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான பொன் மாணிக்கவேல், நடைமு றைகளை மீறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கான சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இது அடிப் படையிலேயே தவறானது” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “ஒரு நேர்மையான நல்ல அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிப்பதில் என்ன தவறு உள்ளது. இதில் அரசுக்கு என்ன பிரச்சினை. அவர் ஓய்வுபெற்றதுதான் உங்களது பிரச்சினையா” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசுதரப்பு வழக்கறிஞர், “பொன் மாணிக்க வேல் ரெய்டு நடத்தியுள்ளார். ஆனால் இன்னும் எதற்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. தற்போது பொன் மாணிக்கவேலுக்கு எதிராக அவரின் கீழ் பணிபுரிந்த 66 போலீஸார் புகார் அளித்துள்ளனர். அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவே அனைத்து புகார்களும் உள்ளன. சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் விசாரித்து முடிக்க நீண்டகாலமாகும்” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், “பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டுக்குதானே” என்றனர்.
அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர், “சிலைக் கடத்தல் வழக்கு விசார ணையை சிபிஐ ஏற்கவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருப் பதன் நோக்கமே இந்த வழக்கு களை இழுத்தடிக்க வேண்டும் என்பதுதான்” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலின் நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது” எனக்கூறி வழக்கு விசாரணையை பிப்.19-க்கு தள்ளி வைத்தனர்.
அதேபோல ஓய்வுபெற்ற அதி காரியின் பதவியை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து எதிர்மனுதாரர்களான யானை ராஜேந்திரன், டிராஃபிக் ராமசாமி ஆகியோரும், இந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பொன்மாணிக்கவேலும் பதிலளிக்க, நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT