Last Updated : 22 Jan, 2019 08:14 AM

 

Published : 22 Jan 2019 08:14 AM
Last Updated : 22 Jan 2019 08:14 AM

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அமலாவது சாத்தியமில்லை: ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதாக அதிமுக எம்.பி.க்கள் தகவல்

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமலாகாது என அதிமுக எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசியல் சாசன சட்ட மசோதா சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற மத்திய அரசின் சட்டங்களை மாநிலங்கள் நிறைவேற்ற தனியாக சட்டப்பேரவையிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அமலாக்குவது வழக்கம். இந்த மசோதாவில் அதற்கான தேவை இல்லாதவகையில் அப்படியே இடஒதுக்கீட்டை மாநிலங்கள் அமலாக்க வகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத், மாநிலங்களவையில் விளக்கம் அளித்திருந்தார். இந்த இடஒதுக்கீட்டுக்கு குடியரசு தலைவரும் ஜனவரி 12-ல் ஒப்புதல் அளித்ததையடுத்து, முதல் மாநிலமாக குஜராத் அந்த சட்டத்தை அமல்படுத்தியது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களும் இதை அமலாக்குவதில் தீவிரமாகி உள்ளன.

இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தமிழக அரசு அமலாக்காது எனத் தெரியவந்துள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற இருஅவைகளிலும் கடுமையாக எதிர்த்து பேசிய அதிமுக எம்பிக்கள் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். மேலும், பல்வேறு சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தமிழகத்தில் 69 சதவீதமாக அமலில் உள்ளது. இதனால், அதைவிடக் கூடுதலாக இடஒதுக்கீடு அளிக்க எந்த சாத்தியமும் இல்லை என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக இருப்பதாலும் அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமலாக்காது என அதிமுக எம்பிக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம்அதிமுக எம்பிக்கள் வட்டாரம் கூறுகையில், ‘‘நாட்டுக்கே முன் உதாரணமாக தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்த கூடுதல் ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதால், முதல்வராக இருந்த ஜெயலலிதா அனைத்துகட்சி கூட்டம் போட்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசுக்குஅனுப்பினார்.

இது, நாடாளுமன்றத்தில் மசோதாவாகவும் அமலாக்கப்பட்டுள்ளது. இதற்கும் அதிகமான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமலாக்க முடியாது. மற்ற மாநிலங்களில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பதால் அது சாத்தியம். மத்திய அரசின் சட்டங்கள் அனைத்தையும் மாநிலங்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. அதிலும் இதில் மத்திய அரசு செய்தது அரசியல் சாசனத் திருத்தம். இதன் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அளிக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை’’ எனத் தெரிவித்தனர்.

அதிமுகவின் கொள்கையின்படி இடஒதுக்கீடு என்பது சமுதாயம் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் என உள்ளது. இன்று பொருளாதாரத்தில் பின் தங்கியவர் நாளை முன்னேறிவிடுவார் என்றும், இதனால் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்பதும் அதிமுகவின் வாதமாக உள்ளது.

இதை மத்திய அரசின் மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், மாநிலங்களவையில் அதிமுக தலைவர் நவநீதகிருஷ்ணனனும் விரிவாக பேசினர். எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி உள்ளிட்ட நிறுவனங்களில் மட்டும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x