Published : 30 Jan 2019 04:14 PM
Last Updated : 30 Jan 2019 04:14 PM
2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி எங்களுடைய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் நாட்டில் வீடுகள் விலை குறைந்து, இளைஞர்களின் வீடுவாங்கும் கனவு நிறைவேறி வீடுகள் வாங்க முடிகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
நாட்டில் கறுப்புப்பணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் 85 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தனர். ஏடிஎம்களிலும், வங்கியிலும் தங்களின் சேமிப்புளை எடுக்க வரிசையில் நின்றவகையில் 150க்கும் மேற்பட்டோர் நாடுமுழுவதும் இறந்ததாக செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் வீடுகள் விலை குறைந்துவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.
சூரத் விமானநிலையத்தில் புதிய முனையம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி கூட்டத்தில் பேசியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி எங்கள் அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் நாட்டில் வீடுகளின் விலை குறைந்தது. வீடுவாங்கும் ஆசையுள்ள இளைஞர்கள் வாங்கும் அளவுக்கு வீடுகள் விலை வந்தது.இதைக் கடந்த ஆட்சியாளர் செய்திருந்தால், அவர்ளுக்கு 25 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாங்கள் எடுத்த முடிவால், என்ன பலன் ஏற்பட்டது. இதை இளைஞர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் எடுத்த பணமதிப்பிழப்பு முடிவுக்குப் பின் வீடுகள் இளைஞர்கள் வாங்கும் அளவுக்கு விலை குறைந்ததுதானே. ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப்பணம் பதுக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டமும் அதைத் தடுத்துள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் விமானத்தில் பயணிக்கும்வகையில் சூழலை எளிமைப்படுத்தி, உதான் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இதுவரை 1.30 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் தொங்கு நாடாளுமன்றமே அமைந்து வந்தது. இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக நிலையாக அரசுக்கு மக்கள் வாக்களித்து பாஜகவுக்கு பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள். அதன்பின் நாட்டின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT