Published : 25 Sep 2014 10:04 AM
Last Updated : 25 Sep 2014 10:04 AM

10 புகைப்படங்களை அனுப்பியது மங்கள்யான்: பிரதமர் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களில் வெளியாகும் என தகவல்

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்துள்ளது.

இந்தப் புகைப்படங்களை முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிய பின்னர் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சில மணி நேரங்களில் விண்கலத்தில் இருந்தவற்றில் 5 உபகரணங்கள் இயக்கப்பட்டன.

அதில் ஒன்று வண்ணப் புகைப்பட கேமராவாகும். அந்த கேமரா செயல்படத் தொடங்கி, 10 புகைப்படங்களை அனுப்பியுள்ளது. மற்ற இயந்திரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக செயல்படத் துவங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்கள் குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது: "மங்கள்யான் விண்கலத்தின் வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் நல்ல தரத்தில் உள்ளன. 10 புகைப்படங்கள் கிடைத்துள்ளன. பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் தகவல் மையத்திற்கு இந்த புகைப்படங்கள் வந்துள்ளன. புகைப்படங்களை, பிரதமர் நரேந்திர மோடியிடம் காண்பித்த பிறகு அவை ஊடகங்களுக்கு வழங்கப்படும்" இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x