ஜேஎன்யு பல்கலை தேசத்துரோக வழக்கு: கண்ணய்யா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜேஎன்யு பல்கலை தேசத்துரோக வழக்கு: கண்ணய்யா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தீவிரவாதிகளை ஆதரித்து கோஷமிட்ட வழக்கில் முன்னாள் மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பான விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமார், மாணவர்கள் உமர், அனிர்பன் ஆகியோர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உயர்நிலைக்குழுவை அமைத்தது.

இக்குழுவின் அறிக்கையின்படி, கண்ணய்யா குமார் உள்ளிட்டோருக்கு அபாரதம் உள்ளிட்ட தண்டனைங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் மீதான தேச துரோக வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கண்ணய்யா குமார் கைதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பின்னர் இந்த வழக்கில் அவர்கள் ஜாமீன் பெற்றனர்.

இந்தநிலையில் கண்ணய்யா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா பெருநகர நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1,200 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையில், கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in