Published : 25 Jan 2019 06:02 PM
Last Updated : 25 Jan 2019 06:02 PM
உத்தரப் பிரதேசத்தில் சந்தோஷ் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக எல்லோரும் நினைத்து இறுதிச் சடங்கை மேற்கொள்ள முயன்றபோது, அது தற்கொலை அல்ல கொலை என்று இறந்தவரின் 4 வயது மகள் சாட்சி கூறியுள்ளார்.
புலந்த்ஷெஹரைச் சேர்ந்த 31 வயது மனிதர் சந்தோஷ் ராகவ். நொய்டாவில் எலக்ட்ரிஷியனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி மம்தா. இருவருக்கும் 4 வயதில் மகளும் 2 வயதில் மகனும் உள்ளனர்.
மம்தா வேலையில் இருந்து வீடு திரும்பியபோது, சந்தோஷ் வீட்டு மாடியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்தார் மம்தா. நண்பர்களின் உதவியுடன் சந்தோஷைக் கீழே இறக்கிய அவர், இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள புலந்த்ஷெஹர் கொண்டு சென்றார்.
அவர்கள் அனைவரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது, மயக்கத்தில் இருந்த சிறுமி எழுந்துள்ளார். அப்பா எங்கே என்று கேட்க, அவர் இறந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, இரண்டு அங்கிள்கள் வீட்டுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் கூறிய சிறுமி, ''இரண்டு அங்கிள்கள் வீட்டுக்கு வந்தனர். ஒருவர் ஒல்லியாகவும் மற்றொருவர் குண்டாகவும் இருந்தார். இருவரும் சேர்ந்து அப்பாவின் வாயில் எதையோ ஊற்றினர். ஒல்லி அங்கிள் அப்பாவை மாடிக்குத் தூக்கிச் சென்றார். அங்கே அம்மாவின் துப்பட்டாவில் அவரைத் தொங்கவிட்டார். நான் பயத்தில் ரூமுக்குள் ஒளிந்துகொண்டேன். அப்படியே மயக்கமாகி விட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த நொய்டா போலீஸார் உடனடியாக புலந்த்ஷெஹர் சென்று பிரேதத்தை நொய்டா கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா, ''சந்தோஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. அறிக்கை வந்தவுடன் வழக்கு பதிவு செய்யப்படும்.
அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது இரண்டு ஆண்கள் வந்துபோனது தெரிய வந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT