Published : 31 Jan 2019 08:57 PM
Last Updated : 31 Jan 2019 08:57 PM
வேலையின்மை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் நடத்திய ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து வெளியிட்ட 'பிஸ்னஸ் ஸ்டார்டு' நாளேடு செய்தியை மேற்கோள்காட்டி 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நிலவியதற்கு ஒப்பாகும் என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011-12-ம் ஆண்டில் வேலையின்மை அளவு 2.2 சதவீதம் இருந்த நிலையில், இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவீதம் உயர்ந்து 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாகவும் இருந்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முழுமையான ஆய்வு அறிக்கை என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது என்று ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது:
‘‘வேலையின்மை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் முழுமையானது அல்ல. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் இந்த புள்ளி விவரங்கள் 2011 - 12-ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது தவறானது’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT