Last Updated : 16 Jan, 2019 05:37 PM

 

Published : 16 Jan 2019 05:37 PM
Last Updated : 16 Jan 2019 05:37 PM

பரபரப்பு மருத்துவ ஊழலில் சிக்கிய இந்திய  ‘பத்மஸ்ரீ’ மருத்துவர் அமெரிக்காவில் 7 மில். டாலர்கள் பிணையில் விடுதலை

464 மில்லியன் டாலர்கள் பெறுமான அமெரிக்காவை உலுக்கிய மருத்துவ ஊழல் சதி வழக்கில் சிக்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவர் ராஜேந்திர போத்ரா மிகப்பெரிய, சாதனையான தொகையான 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய மருத்துவ ஊழல் என்று வர்ணிக்கப்படும் 464 மில்லியன் டாலர்கள் ஊழல் சதி வழக்கில் ராஜேந்திர போத்ராவுடன் இன்னும் 5 பேர் குற்றம்சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்து வருகின்றனர்.

 

சுருக்கமான பின்னணி:

 

இந்த மோசடியினால்தான் ‘ஓபியாய்ட் எபிடெமிக்’ அங்கு உருவானதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.  ஓபியாய்ட் மருந்துகள் என்பது மிதமான வலுவுடன் கூடிய வலிநிவாரணிகளாகும்.  இது ஆக்ஸிகோடன் என்ற வகையின மருந்தாகும், இது ஆக்ஸிகாண்டின், பெர்கோசெட் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படுகிறது. இது ஓபியம் வகை மருந்து என்பதால் டாக்டர்கள் மருந்துச் சீட்டு இல்லாமலும் பெரிய அளவில் விற்றது, கிட்டத்தட்ட போதை மருந்துதான் இது. இதனால் மருத்துவர்கள் பரிந்துரையைம் தாண்டி மக்கள், குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்கள் இதன் போதைக்காக அடிமையாகி பயன்படுத்தி பழக்கத்துக்கு அடிமையானது கிட்டத்தட்ட 90களில் இருந்து தொடங்கியது.

 

இதனை மருத்துவர்கள் பெரிய அளவில் மக்களுக்கு பரிந்துரை செய்ததில் ஓவர்டோஸ் காரணமாக நிறைய மரணங்கள் ஏற்பட்டன.  மூச்சுக்குழல் பிரச்சினை ஏற்பட்டன, காரணம் இது நேரடியாக ‘மெடுல்லா ஆப்ளங்கேட்டாவை’ தாக்கக் கூடியது.

 

இந்த கொடிய வலிநிவாரணியினால் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையினர் அமெரிக்காவில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகினர்.. 2010-ம் ஆண்டு அமெரிக்க அரசு மருத்துவர்கள், மருந்து விற்பனையாளர்கள் மீது நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. 2017 மார்ச்சில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நியூஜெரி கவர்னர் கிறிஸ் கிறிஸ் கிரிஸ்டி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார். ஆகஸ்ட் 10, 2017-ல் இந்த கமிஷனின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட ட்ரம்ப் நிர்வாகம், இதனை ‘ஓபியாய்ட் நெருக்கடி நிலை’ என்று அறிவித்தது.

t1

 

இந்த வழக்கில் தற்போது பயங்கர செல்வாக்குள்ள இந்திய-அமெரிக்க பத்மஸ்ரீ மருத்துவ நிபுணர் ராஜேந்திர போத்ரா சிக்கியுள்ளார், இவருடன் மேலும் 5 பேரும் சிக்கி வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

ராஜேந்திர போத்ராவுக்கு வயது 77. இவரிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு மனிதர் இந்தியாவுக்கு தப்பி விடுவார் என்று அரசு அச்சப்படுவதற்கு இடையே அமெரிக்க மாவட்ட நீதிபதி ஸ்டீபன் மர்பி  சாதனைத் தொகையான 7 மில்லியன் டாலர்கள்  தொகைக்கு ஜாமீன் அளித்து விடுவித்துள்ளார்.

 

புளூம்பீல்ட் ஹில்சைச் சேர்ந்தவரான போத்ரா வீட்டுக்காவலிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டு ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுவார். அவர் தன் சொத்துக்கள் விவரங்களை இப்போது வெளியாட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய மருத்துவ ஊழலாகப் பார்க்கப்படும் இதில் பிணை பெற்ற இவர் தற்போது 8.5 மில்லியன் டாலர்கள் என்ற தன் ஓய்வுகால கணக்கிலிருந்து இந்தத் தொகையைச் செலுத்தியாக வேண்டும்.

 

விசாரணைக்கு வந்திருந்த போத்ராவின் மனைவி மற்றும் மகள் தங்களது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்தாக வேண்டும்.

 

இந்தியாவுடன் போத்ராவுக்கான பிணைப்பு:

 

இந்தியாவுடன் போத்ராவுக்கு மிகப்பெரிய பிணைப்பு உள்ளது. முதலீடுகள் உள்ளன, ஏகப்பட்ட உறவினர்கள் உள்ளனர். உயர்மட்ட குடியரசு கட்சியின் தொண்டராகவும் செயல்பட்டு நிறைய தொகையினை கட்சிக்காக திரட்டிக் கொடுத்தவர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ்ஷுக்காக 80களிலும் 90களின் ஆரம்ப காலக்கட்டங்களிலும் நிறைய நிதித் திரட்டிக் கொடுத்துள்ளார்.

 

அமெரிக்காவில் இவர் தொழில் ரீதியாகச் சாதனைகள் பல புரிந்தாலும் இந்தியாவில் இவர் ஏழைகளுக்காகவும் நோயுற்றவர்களின் நலன்களுக்காகவும் பாடுபட்டதாகக் கூறப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் 8 மாதங்கள் தன் சொந்த செலவில் இந்தியா வந்து எய்ட்ஸ், புகையிலை, மது மற்றும் போதை மருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் சில அமைப்புகளுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார்.

 

மகாராஷ்ட்ரா லத்தூரில் படுபயங்கர பூகம்பம் ஏற்பட்ட காலத்தில் அங்கு மருத்துவமனைகளை மீண்டும் கட்டித்தருவதற்கு உதவியுள்ளார். இதற்கிடையே போத்ராவின் சொத்துக்கணக்கை வழக்கறிஞர்களால் நிர்ணயிக்க முடியவில்லை... அது 35 மில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அட்டர்னி பிராண்டி மெக்மில்லன், போத்ரா பற்றி கூறும்போது, இவருக்கு ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்று உள்ளது. இதில் 22 சொத்துக்கள் டெட்ராய்ட் நகரில் மட்டும் உள்ளன. இதில் 2.8 மில்லியன் டாலர்கள் பெறுமான வணிக வளாகங்களும் அடங்கும்.

 

இந்தச் சொத்துக்குவிப்பு மருத்துவ கிரிமினல் குற்றங்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டதா என்பதை விசாரணையாளர்கள் தற்போது குடைய ஆரம்ப்பித்துள்ளனர். தற்போது இவரை பிணையில் விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

 

நோயாளிகளுக்கு தேவையற்ற முதுகு வலி நிவாரணிகளையும் ஊசிமருந்துகளையும் கடுமையான அளவில் பெரிய அளவில் பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பணம் கிடைத்ததாகவும் கிரிமினல் சதி வழக்கில் கடந்த மாதம் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x