Published : 30 Jan 2019 09:35 AM
Last Updated : 30 Jan 2019 09:35 AM

தகவல் ஆணையர்களாக வல்லுநர்கள் ஏன் நியமிக்கப்படுவதில்லை?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அதிகாரிகள், இப்போது பதவி வகிக்கும் அதிகாரிகள் என அதிகாரிகள் மட்டும் நியமிக்கப்படுவது ஏன், வல்லுநர்கள் ஏன் நியமிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தகவல் அறியும் ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி, எஸ். அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரணவ் சச்தேவா வாதிடுகையில், "தகவல் ஆணையர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதால், 23,500 மேல்முறையீட்டு மனுக்கள் தலைமைத் தகவல் ஆணையரிடம் நிலுவையில் உள்ளன.

தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பர் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும். தகவல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படத்தன்மை நிலவ வேண்டியது அவசியமானதாகும். ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள், இப்போதைய அரசு அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

செய்தியாளர்கள், வழக்குரைஞர்கள், விஞ்ஞானிகள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட வேண்டும் " எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி ஏ.கே. சிக்ரி, " ஓய்வு பெற்ற அதிகாரிகளும், இப்போதுள்ள அதிகாரிகள் மட்டுமே ஏன் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் 280 விண்ணப்பங்கள் தகவல் ஆணையர் பதவிக்கு வந்ததில் அதில் 14 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த 14 பேருமே அதிகாரிகள். நாங்கள் நியமனத்தை குற்றம் சொல்லவில்லை. அதிகாரிகள் தவிர்த்து துறை சார்ந்த வல்லுநர்கள் ஏன் நியமிக்கப்படுவதில்லை.

ஒருவேளை இந்தப் பதவிக்கு அதிகாரிகள் மட்டுமே பொருத்தமானவர்கள் என்று அரசு நினைக்கிறதா. அதிகாரிகள் தகுதியானவர்களாக இந்தப் பதவியில் அமர்த்தலாம், அதேசமயம், மற்ற துறை வல்லுர்களையும் கருத்தில் கொள்ள சட்டத்தில் இடம் இருக்கிறது " என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் தெரிவித்தார்.

அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கூறுகையில், " தலைமைத் தேர்தல் ஆணையர் எந்தவிதமான அவசரகதியிலும் நியமிக்கப்பட்டதில்லை. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுதான் நியமிக்கப்பட்டனர். தகவல் ஆணையர்களை நியமிக்க தேர்வுக் குழு 14 பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. அவர்களில் ஒருவர் மட்டும் ஓய்வு பெற்ற நீதிபதி. எஞ்சியுள்ள அனைவரும் அரசு அதிகாரிகள் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x