Published : 02 Jan 2019 06:09 PM
Last Updated : 02 Jan 2019 06:09 PM

மேகேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி; தமிழக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபோலவே மாநிலங்களவையிலும் அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காவிரியின் நதியின் குறுக்கே, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழ அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல நாட்களாக இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்தநிலையில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் பிரச்சினை எழுப்பினர். ரபேல் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது, அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.

மேகேதாட்டு அணைக்கு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை சுமூகமாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாறி மாறி அவை ஒத்த வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக எம்.பி.,க்களை 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்திர மகாஜன் உத்தரவிட்டார்.

இதுபோலவே மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினைக்காக அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் நதி நீர் உரிமையை அங்கீகரிக்க வேண்டும், மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x