Published : 09 Jan 2019 11:37 AM
Last Updated : 09 Jan 2019 11:37 AM
சிபிஐ இயக்குநராக அலோக் குமார் வர்மாவை மீண்டும் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 77 நாட்கள் கட்டாய விடுப்பை முடித்து அவர் மீண்டும் இன்று அலுவலகம் வந்து பணிகளைத் தொடங்கினார்.
கடந்த 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
நிதி மோசடி தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தது. இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக, அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதங்களை அனுப்பினார்.
அலோக் குமார் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார் எழுப்பியதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு கட்டாய விடுமுறையில் அனுப்பியது.
கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவால் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா செயல்படுவதில் தடை நீங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா, இன்று (புதன்கிழமை) மீண்டும் அலுவலகம் வந்தார்.
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவின் 2 ஆண்டு பதவிக்காலம், வரும் 31-ம் தேதியோடு நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT