Published : 13 Jan 2019 04:49 PM
Last Updated : 13 Jan 2019 04:49 PM

அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் அரசு உதவித்தொகை: சிக்கிம் ஆளும் கட்சி அதிரடி அறிவிப்பு

சிக்கில் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யுபிஐ (UBI) எனப்படும் இலவச அடிப்படை மாத ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது. தனி மனிதர்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் அத்தியாவசிய செலவை கணிக்கிட்டு அதனை அரசே வங்கி கணக்கில் செலுத்துவது தான் இந்த திட்டம்.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருப்பவர் சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பவன் குமார் சாம்லிங்.  இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் பெரும் மக்கள் ஆதரவை பெற்றவர்.

சிக்கிம் மாநிலத்தை முழுமையாக இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாற்றிய பெருமை சாம்லிங்கையே சாரும். இதுமட்டுமின்றி இவரது ஆட்சி்க்காலத்தில் தேவையை விட 10 மடங்கு மின்சாரம் தயாரிக்கும் மாநிலம், நாட்டிலேயே சுகாதர சீ்ரகெடு குறைவான மாநிலம், குப்பைகள் இல்லாத மாநிலம் என பல பெருமைகளை சிக்கிம் பெற்றுள்ளது.

இதனால் சிக்கிம் மாநிலத்தில் சாம்லிங் சார்ந்த சிக்கிம் ஜனநாய முன்னணியை தவிர எந்த கட்சியையும் மக்கள் தேர்தலில் தேர்வு செய்வதில்லை. பெரும் மக்கள செல்வாக்குடன் தொடர்ந்து அவரே முதல்வராக பதவி வகித்து வருகிறார். மக்களவை தேர்தலுடன், சிக்கிம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி புதிய வாக்குறுதிகளை சாம்லிங் அறிவித்துள்ளார்.

மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் யுபிஐ (UBI) எனப்படும் மாதந்தோறும் அடிப்படை ஆதார ஊதியமாக அரசு ஒரு தொகையை மக்களுக்கு வழங்கும். வேலைவாய்ப்பு இல்லாதது, முதியவர்கள், ஆதரவற்றோர் என பல காரணங்களுக்காக வழங்கப்படும் மாத ஊக்கத் தொகையை தவிர தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த தொகை அடிப்படை ஊதியமாக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தனி மனிதர்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் அத்தியாவசிய செலவை கணிக்கிட்டு அதனை அரசே வங்கி கணக்கில் செலுத்துவது தான் இந்த திட்டம்.

சிக்கிம் மாநிலத்தில் அதிகஅளவு மின்சாரம் உற்பத்தி செய்வதால் தேவை போக மித மிஞ்சிய அளவு இருக்கும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. இதன் மூலம் பெரிய அளவில் சிக்கம் மாநில அரசு வருவாய் ஈட்டி வருகிறது. எனவே இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் எனவும் சாம்லிங் கூறியுள்ளார்.

வேலை உறுதி அளிப்பு, வருவாய் உத்தரவாதம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இந்த திட்டம் ஒரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் இது செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் இதனை செயல்படுத்தும் முதல் பகுதியாக சிக்கிம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x