

நாடுமுழுவதும் 8-ம் வகுப்பு வரை மாநில மொழி, ஆங்கிலத்துடன், ஹிந்தியையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என பள்ளி கல்வி பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்த கே.கஸ்தூரி ரங்கன் கமிட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.
நாடுமுழுவதும் தொடக்க கல்வி முதல் நடுநிலை வகுப்பு வரை பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நியமித்தது.
இந்த குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் சமர்பித்துள்ளது. அதில் நாடுமுழுவதும் 8-ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை தொடக்க நிலையில் இருந்தே கற்றுத் தர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே அந்தந்த மாநில மொழிகளுடன், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை கட்டாயமாக கற்கபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தாக்கல் செய்த குழுவினர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்திக்கவும் நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளனர். எனினும் இந்த அறிக்கையை ஏற்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்னமும் முடிவெதுவும் எடுக்கவில்லை.