Published : 11 Jan 2019 11:32 AM
Last Updated : 11 Jan 2019 11:32 AM
மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானம் உள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு என மத்திய அரசின் இடஒதுக்கீடு திட்டத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இம்மம்சோதா மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதாவுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மசோதா கொண்டு வரப்பட்ட நேரத்தை மட்டும் கேள்வியெழுப்பிய காங்கிரஸ் அம்மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இந்த நிலையில் மத்திய அரசின் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம்! மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானம் உள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு! ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது’‘ என சிதம்பரம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT