Published : 29 Jan 2019 12:04 PM
Last Updated : 29 Jan 2019 12:04 PM
மக்களவை தேர்தலுடன் சேர்த்து பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் நடத்த பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அரசை நேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பாஜகவும், எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. பல மாநிலங்களில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநில அரசுகளின் பதவிக்காலமும் முடிவடைவதால் அந்த மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
அதேசமயம், பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைகிறது. அதுபோலவே பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைகிறது.
அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. திட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என பாஜக தலைமை எண்ணுகிறது. எனவே ஒரே நேரத்தில் மக்களவையுடன் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக கோரி வருகிறது.
இந்தநிலையில் மக்களவை தேர்தலுடன், பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை நடத்த பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் பாஜக தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசுகளின் பதிலை பொறுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT