Last Updated : 10 Jan, 2019 08:13 AM

 

Published : 10 Jan 2019 08:13 AM
Last Updated : 10 Jan 2019 08:13 AM

3-வது அணிக்கு அச்சாரமா?- எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணையாது: ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

காங்கிரஸை எதிர்த்து ஒடிஷாவில் துவக்கப்பட்ட கட்சி பிஜு ஜனதா தளம். அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், அம்மாநிலத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைத்துள்ளார்.

முதல்வர் பதவியை ஏற்பதற்கு முன்பாக, 2000-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நவீன் பட்நாயக் மத்திய அமைச்சராக இருந்தவர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெகா கூட்டணியில் சேர்வது குறித்து விரைவில் அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் தமது கட்சி இணையாது என தெரிவித்திருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் நவீன் பட்நாயக் கூறும்போது, ‘எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியை பொறுத்தவரை, பிஜு ஜனதா தளம் அதன் உறுப்பினர் அல்ல. வரும் மக்களவை மற்றும் ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலிலும் அக்கூட்டணியில் இணையப் போவதில்லை. காங்கிரஸ், பாஜகவை சரிநிகர் தொலைவிலேயே வைத்திருப்போம்’ என்றார்.

பிஜேடியை போல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா மாநில முதல் அமைச்சருமான கே.சந்திரசேகர ராவ். இவர் மூன்றாவது அணியை அமைக்கும் பொருட்டு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தார்.

இந்த சூழலில், நவீன் பட்நாயக்கின் இந்த அறிவிப்பு, மூன்றாவது அணிக்கு அச்சாரமிடுவதாகவே கருதப்படுகிறது. தற்போதைக்கு 3-வது அணியில் சந்திரசேகர ராவுடன் நவீன் பட்நாயக் மட்டுமே இணையும் நிலையில் இருக்கிறார். எனவே, மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்தே மூன்றாவது அணியின் நிலை என்னவென்று தெரியவரும்.

மும்முனைப்போட்டிமக்களவைத் தேர்தலுடன் ஒடிஷா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அம்மாநிலத்தில் பிஜேடி, பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே மும்முனைப்போட்டி நிகழ உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x