Last Updated : 31 Jan, 2019 02:10 PM

 

Published : 31 Jan 2019 02:10 PM
Last Updated : 31 Jan 2019 02:10 PM

2017-18-ம் ஆண்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை: ஆய்வில் தகவல்

2017-18-ம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் நடத்திய ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து வெளியிட்ட 'பிஸ்னஸ் ஸ்டார்டு' நாளேடு செய்தியை மேற்கோள்காட்டி 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நிலவியதற்கு ஒப்பாகும் என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-12-ம் ஆண்டில் வேலையின்மை அளவு 2.2 சதவீதம் இருந்த நிலையில், இளைஞர்களிடையே வேலையின்மை 13 முதல் 27 சதவீதம் உயர்ந்து 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாகவும் இருந்துள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வந்த  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து எடுக்கப்பட்ட முழுமையான ஆய்வு அறிக்கை என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது என்று ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல்தலைவராக இருந்த பி.சி. மோகனன் , உறுப்பினர் ஜே.மீனாட்சி ஆகியோர் கடந்த திங்கள்கிழமை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த தங்களின் புள்ளிவிவர அறிக்கையை வெளியிட முறையான அனுமதி வழங்கப்படாத காரணத்தால் வேதனை அடைந்துள்ளதாகவும், இதை வெளியிட்ட அரசு தரப்பில் போதுமான ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், மற்ற அரசு நிறுவனங்களின் தலையீடும் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.

இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அரசு கூறினாலும், போதுமான அளவு இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை ஆண்டுதோறும் உருவாக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில், 'சென்டர் பார் மானிடரிங் இந்தியன் எக்கானமி' எனும் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மட்டும் 1.10 கோடி வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேசிய சாம்பிள் சர்வேயின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x