

தனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள உறவு புனிதமானது, உணர்வுப்பூர்மானது, ஆழமானது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்குக்கும், மோடிக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளதாகத் தகவல்வெளியான நிலையில் அதனை மறுத்து, இவ்வாறு தெரிவித்துள்ளார் ராஜ்நாத் சிங்.
இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்கள் உறவு ஆழமாக வளர்ந்துள்ளது.
மோடிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு மிகப் புனிதமானது. உணர்வுப்பூர்மானது, ஆழமானது. அந்த உறவு எதன்காரணமாகவும் பாதிப்படையாது. நான் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தப்பட்டாலும், உறவில் பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்.
என் பொதுவாழ்க்கையில், நம்பகத்தன்மையைத்தான் நான் சம்பாதித்த ஒரே சொத்து. எனது காலத்தை விலங்கைப் போல வீணாகக் கழிக்க மாட்டேன். ஒருவருடன் ஆழ்ந்த உறவு ஏற்பட்டு விட்டால், அவரை எவ்விதத்திலும் காயப்படுத்த நான் நினைக்க மாட்டேன்.
கடந்த காலத்தில் எனக்கு எதிராக சிலர் புகார் கூறியிருந்தது சில குழப்பங்களினால் விளைந்தது. அவர்களுடன் வெளிப்படையாகப் பேச நான் தயார். அப்பிரச்சினைகளைத் தீர்க்கவும் தயார்.
இவ்வாறு, ராஜ்நாத் தெரிவித்தார்.