Published : 05 Jan 2019 03:21 PM
Last Updated : 05 Jan 2019 03:21 PM
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நேற்று 2 மணிநேரம் நீண்ட உரையாற்றியும், கடைசி வரை நான் கேட்ட இரு கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏறக்குறைய 2 மணிநேரம் பேசினார். அப்போது, போபர்ஸ் என்பது ஊழல், ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் நாட்டின் நலனுக்காகச் செய்யப்பட்டது. ரஃபேல் மூலமாகவே மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தி பேசுகையில், “ ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் பிரதமர் மோடி ஓடுகிறார். காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை மாற்றி அமைத்த போது அதை இந்திய விமானப்படை எதிர்த்ததா என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ரஃபேல் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 2மணிநேரம் பேசினார், ஆனால், நான் கேட்ட இரு கேள்விகளுக்கு கடைசிவரை பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்து ட்விட்டரில் இரு கேள்விகளை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
அதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம்(எச்ஏஎல்) இருந்து ரஃபேல் ஒப்பந்தத்தை யார் பறித்தது?, ஒப்பந்தம் மாற்றப்பட்டபோது, இந்திய விமானப்படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா?
இந்த வீடியோவைப் பாருங்கள். ஒவ்வொரு இந்தியரும் பிரதமரிடமும், மற்ற அமைச்சர்களிடம் இந்த கேள்வியைத் தான் கேட்கிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT