Published : 20 Jan 2019 12:27 PM
Last Updated : 20 Jan 2019 12:27 PM
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நெஞ்சு வலி, மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்சினைகளுக்காக கடந்த 16-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அன்று இரவு 9 மணி அளவில் வார்டில் அமித் ஷா சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர் குழுவின் கண்காணிப்பில், அமித் ஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் சீரான நிலையில் இன்று அமித் ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “ பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பாஜக தலைவர் அமித் ஷா உடல்நலம் பெற்று இன்று காலை 10.20 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் “ எனத் தெரிவித்தனர்.
பாஜகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் கூறுகையில், “ அமித் ஷா நலமாக இருக்கிறார், மருத்துவமனையில் இருந்து உடல்நலம்பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி “ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT