Last Updated : 07 Jan, 2019 01:10 PM

 

Published : 07 Jan 2019 01:10 PM
Last Updated : 07 Jan 2019 01:10 PM

நான் ஆணையிட்டால் - மக்களவையில் எம்ஜிஆர் பாட்டுப்பாடிய தெலுங்குதேசம் எம்.பி.

தெலுங்குதேசம் எம்.பி. நரமள்ளி சிவபிராசாத் இன்று மக்களவையில் மறைந்த தமிழக  முதல்வர் எம்ஜிஆர் படப்பாடலை பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற புகார் கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலங்குதேசம் கட்சி கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையிலும் இருந்து விலகியது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகியவற்றில் அமளியில் ஈடுபட்டது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்தும் அது தோல்வியில் முடிந்தது.

இதில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமள்ளி சிவபிராசாத் கடந்த கால கூட்டத்தொடர்களில் நாள்தோறும் வித்தியாசமான தோற்றத்தில் வந்து மாநிலத்தின் கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். சிவன், பார்வதி, பிச்சைக்காரர், ஹிட்லர், அனுமன், என்டிஆர் என பல்வேறு வேடங்களில் வந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினார்.

சிவபிரசாத்தின் வேடம், தற்போது குளிர்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி நாள்தோறும் தெலுங்கு தேச எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நரமள்ளி சிவபிரசாத் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர். போன்று இன்று வேடம் அணிந்து வந்திருந்தார். நாடாளுமன்ற வளாகத்தின் முன் தெலங்குதேசம் எம்.பி.களோடு சேர்ந்து அவர் தங்கள் மாநிலத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.

அதன்பின்  மக்களவைக்கு சிவபிரசாத் சென்றார்.  கேள்விநேரம் தொடங்கியவுடன் எழுந்த நரமள்ளி சிவபிரசாத், அவையின் மையப்பகுதிக்குச் சென்று அங்குநின்று கொண்டு 'எங்கள் வீட்டுப்பிள்ளை' திரைப்படத்தில் வரும் 'நான் ஆணையிட்டால்' என்று எம்ஜிஆர் பாடும் பாடலை அவரைப் போன்று கை அசைவுகளுடன் பாடி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரினார். இதனால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். ஆனாலும், அங்கிருந்து செல்லாத சிவபிரசாத் தனது இருக்கைக்குச் சென்று தனது மைக் மூலம் மீண்டும் எம்ஜிஆர் படப்பாடலை பாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x