Published : 12 Jan 2019 02:32 PM
Last Updated : 12 Jan 2019 02:32 PM
பாஜகவை போலவே காங்கிரஸ் மீதும் மக்கள் வெறுப்புடன் உள்ளனர். ஊழல் கட்சியான காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும், இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
மாயாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் மீதும் மக்கள் வெறுப்புடனே உள்ளனர். இருகட்சிகளுமே ஊழல் கட்சிகள். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்களது வாக்குகள் எதுவும் எங்கள் அணிக்கு வரப்போவதில்லை. எனவே தான் காங்கிரஸை நாங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை. எங்களது அரசியல் இலக்குகளை சீர்குலைக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் நாங்கள் அணிசேர விரும்பவில்லை’’ எனக் கூறினார்.
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என இருகட்சிகளும் அறிவித்துள்ளன. காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT