Published : 12 Jan 2019 01:17 PM
Last Updated : 12 Jan 2019 01:17 PM

உ.பி.யில் கூட்டணி அறிவிப்பு: சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் தலா 38 தொகுதிகளில் போட்டி

வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனை அக்கட்சிகள் இன்று  அதிகாரபூர்வமாக அறிவித்தன. இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலில் கைகோத்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நடவடிக்கை எடுத்து வந்தன.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் கூறியதாவது

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளோம். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸூக்கு செல்வாக்கு இல்லை.

அக்கட்சியின் வாக்குகள் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே அக்கட்சிக்கு கூடுதலாக எந்த தொகுதியையும் ஒதுக்க நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் எங்கள் கூட்டணியில் இணையாவிட்டாலும், இந்த தொகுதியில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தபோவதில்லை. மற்ற இரு தொகுதிகளை சிறு சிறு கட்சிகளுக்கு அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x