Published : 07 Jan 2019 12:28 PM
Last Updated : 07 Jan 2019 12:28 PM
கன்னட திரைப்பட துறையை சேர்ந்தவர்களிடம் கடந்த 4 நாட்களாக வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.109 கோடி சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னட திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர் வீடுகளில் கடந்த வியாழக்கிழமை முதல் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனை வியாழக்கிழமை தொடங்கி, நேற்று வரை நடந்தது.
இந்த சோதனையில் தயாரிப்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட நிதிஉதவியாளர்கள், நடிகர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்தது. கேஜிஎப், தி வில்லன், நடா சரவபோமா ஆகியோ திரைப்படங்களை தயாரித்த நிறுவனங்களின் அலுவலகங்களிலும், விஜய் கிராகண்டூர், சி.ஆர்.மனோகர், ராக்லைன் வெங்கடேஷ், யாஷ் சுதீப், சிவராஜ் குமார், புனீர் ராஜ்குமார், வினியோகிஸ்தர் ஜெயன்னா ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் ஐடி சோதனை நடந்தது.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ரூ.2.85 கோடிக்கு ரொக்கப்பணம், 25.3 கிலோ தங்க நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.109 கோடி என்று வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வருமானவரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த 4 நாட்களாகக் கன்னட திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள், பைனான்சியர், நடிகர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்தது. இதில் கணக்கில் வராத பணம், சொத்துக்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் வராத திரையரங்கு வசூல், வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT