

ரயில்வே தண்டவாளத்தில் திடீரென அரசு பஸ் நின்று போனதால் உயிருக்கு பயந்து அதிலிருந்த 55 பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்திலிருந்து பொப்புலி என்கிற ஊருக்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பொப்புலியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பஸ் பழுதாகி தண்டவாளத்தின் குறுக்கே நின்றது.
அந்த பஸ்ஸில் 55 பயணிகள் இருந்தனர். பஸ் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே நின்று போனதால், எந்த நேரத்திலும் ரயில் வந்து விபத்து நடக்கலாம் என அஞ்சிய பயணிகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பஸ்ஸில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.
பின்னர் இதுகுறித்து அருகில் இருந்த ரயில்வே கார்டிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பஸ்ஸை சாலை வரை தள்ளி விபத்து ஏற்படாமல் தவிர்த்தனர். பிறகு மாற்று பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.