Published : 22 Jan 2019 09:16 AM
Last Updated : 22 Jan 2019 09:16 AM

முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை ஆகியோருக்கு உதவித் தொகை உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு

நாட்டில் உள்ள ஏழை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு மாத உதவித் தொகையை உயர்த்த மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திடம் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்குகளைக் கவர்வதற்காக இதுபோன்ற சலுகைகளை அறிவிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, தற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது, இதை ரூ.800 ஆக உயர்த்தப்பட உள்ளது. 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகையை உயர்த்தும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால், அதன்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கோரப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது அரசுக்குக் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் “ எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு உதவித்தொகை, மாநில அரசுகளின் உதவித்தொகை ஆகியவற்றை இணைத்து வழங்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. அது தொடர்பாக கள ஆய்வுகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில் 5 மாநிலத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை வேகப்படுத்தி, கிராமப்புற மக்களைக் கவர உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம்.

மத்திய அரசின் உதவித்தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய சமூக உதவித்தொகை திட்டத்துக்கு(என்எஸ்ஏபி) நடப்பு ஆண்டில் ரூ.9,975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 3 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள். இதில் 80 லட்சம் விதவைகள், 10 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 2.20 கோடி ஏழை முதியோர்கள் அடக்கம்.

80 வயதுக்கு மேலான முதியோருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகையும், மற்ற முதியோருக்கு ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பின் இந்தத் தொகை உயர்த்தப்படவில்லை. மாநில அரசுகள் தங்களின் பங்களிப்பாக ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அளிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x