Last Updated : 17 Dec, 2018 03:19 PM

 

Published : 17 Dec 2018 03:19 PM
Last Updated : 17 Dec 2018 03:19 PM

ரஃபேல் விவகாரத்தில் தெரிந்தே மக்களை தவறாக வழி நடத்துகிறது காங்கிரஸ்- நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விலை விவகாரத்தில் தெரிந்தே மக்களைத் தவறாக  காங்கிரஸ் வழி நடத்துகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது. அதில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

ரஃபேல் போர் விமானங்கள் குறித்த விவரங்கள், விலை ஆகியவற்றை மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியிடம் தெரிவித்து அவர் ஆய்வு செய்தபின், நாடாளுமன்ற பொதுக்கணக்குழுவும் ஆய்வு செய்துவிட்டது. இப்போது நாடாளுமன்ற அனுமதிக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவுக்கு இதுவரை மத்திய அரசு ரஃபேல் போர் விமானங்கள் குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்று பொதுக்கணக்குக் குழுவின் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பிவருவதையடுத்து, அதற்கு எதிராக நாடுமுழுவதும் 70 இடங்களில் விளக்கக் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக மும்பையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்திலும், விலை விவரங்களிலும் தெரிந்துகொண்டே மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ் கட்சி. நாட்டின் பழமையான கட்சியை நடத்தும் முதல் குடும்பத்தினர், ரஃபேல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் கூட காது கொடுத்து கேட்காமலும், மதிக்காமல் செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.

ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விலை குறித்த விவரங்களை மத்தியஅரசு மத்திய தலைமைத் தணிக்கைத் துறை அதிகாரியிடம் வழங்கி இருக்கிறது. நாடாளுமன்ற நடைமறையின்படி, சிஏஜி குழு சரிபார்த்துவிட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும், அதன்பின் அந்த அறிக்கை பொதுக்கணக்குக் குழுவிடம் தாக்கல் செய்யப்படும். பொதுக்கணக்குக்குழு பார்த்த பின்புதான் அது பொதுமக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதான் நடைமுறை இந்த நடைமுறைதான் நடந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்கூட இந்த நடைமுறைகள் குறித்தும், விவரங்கள் குறித்தும்தான் விளக்கியுள்ளோம். தகவல் பரிமாற்றத்தில் ஏதேனும் குழப்பம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் கருதுகிறோம். ஆதலால்தான் நீதிமன்றத்தில் முறையீட்டு மீண்டும் தெளிவுபடுத்தக் கோரியுள்ளோம். நீதிமன்றத்தில் இருந்து பதில் வரும் வரை காத்திருப்போம்.

நாங்கள் எவ்வாறு ரஃபேல் போர் விமானக் கொள்முதலைச் செய்தோம், விலையை நிர்ணயித்தோம் என்பது விரைவில் நாடாளுமன்றத்துக்குத் தெரியவரும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x