நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்
Updated on
1 min read

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய கட்டுமான மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம், செங்கல் கொண்டு கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்வது குறித்து ஆய்வு செய்யக் கோரியுள்ளது.

மத்திய நகர விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மத்திய பொதுப்பணித்துறை தனது அதிகாரிகளிடம் செங்கலைக் கட்டுமானப் பயன்பாட்டுக்குத் தடை செய்வதன் பாதகம், சாதகம் என்ன என்பது குறித்த கருத்துகளை வரும் 11-ம் தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய பொதுப்பணித்துறை என்பது, மத்திய அரசு தொடர்பான கட்டிடங்கள், மத்திய சுயாட்சி நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கான கட்டிடங்களைக் கட்டமைத்துக் கொடுக்கும் அமைப்பாகும்.

இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வீணாகும் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கல்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதன் மூலம் வீணாகும் பொருட்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம், சூழலையும் பாதுகாக்கலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, கட்டுமானங்களில் சுட்ட களிமண் செங்கல்களை பயன்படுத்துவதைத் தடைவிதிக்கலாமா என்பதை ஆய்வு செய்ய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

பாரம்பரியமாகக் களிமண், செம்மண் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்டும் செங்கல்களாலும், செங்கற் சூளை போன்றவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்று மத்திய அரசு கருதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in