25 முறை இந்தியா வந்த கிறிஸ்டியன் மைக்கேல்; அதிர வைக்கும் ஹெலிகாப்டர் பேர ஊழல்: சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தகவல்

25 முறை இந்தியா வந்த கிறிஸ்டியன் மைக்கேல்; அதிர வைக்கும் ஹெலிகாப்டர் பேர ஊழல்: சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தகவல்
Updated on
2 min read

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் புதிய திருப்பமாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாட்டை உலுக்கிய ஊழல் வழக்கில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளது புதிய திருப்பமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் குறித்த சில முக்கிய தகவல்கள்:

1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

2) ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.

3) இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

4) அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர்  கிறிஸ்டியன் மைக்கேல்.

5) அகஸ்டாவெஸ்லேண்ட் வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதில் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு உள்ள தொடர்பு பற்றி பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

6) கிறிஸ்டியன மைக்கேல் குளோபல் சர்வீசஸ் (துபாய்) மற்றும் குளோபல் டிரேட் அண்ட் காமர்ஸ் சர்வீசஸ் (லண்டன்) ஆகியவற்றை நடத்தி வந்தார்.

7) பின்மெக்கானிக்கா நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தங்கள் பெற்று பணிகள் செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திடம் இருந்து 350 கோடி ரூபாய் பெற்று ஹெலிகாப்டர் தொடர்பான பணிகளை செய்வதாக கூறியுள்ளார். அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பின்மெக்கானிக்கா.

8) அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் பேரம் நடந்தபோது 25 முறை இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9) டெல்லி அசோகா ஹேட்டல் தங்கியுள்ள அவர் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்றுள்ளார். முக்கிய அதிகாரிகள், சில அரசியல்வாதிகளையும் அவர் சந்தித்துள்ளார்.

10) 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் தங்கி இருந்து போட்டி நிறுவனங்கள் குறித்த தகவல்களை ரகசியமாக பெற்று ஒப்பந்த புள்ளிகளை முடிவு செய்வதற்காக தனது நிறுவனத்துக்கு தகவல்களை அனுப்பியுள்ளார்.

11) இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும், கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டால் பேரம் நடந்த விவரங்கள், சர்வதேச தொடர்புகள் உள்ளி்ட்டவை தெரியவரும் என சி.பி.ஐ நம்புகிறது.

12) அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

13) இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

14) கிறிஸ்டியன் மைக்கேல் தற்போது இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in