Published : 12 Dec 2018 01:40 PM
Last Updated : 12 Dec 2018 01:40 PM
அனைத்து விதமான தலைமைப்பண்புக்கான தேர்விலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஸாகிவிட்டார், வரும் மக்களவைத் தேர்தலுக்குப்பின் பிரதமராக ராகுல் உருவாகுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம். வீரப்ப மொய்லி புகழாரம் சூட்டினார்.
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபின் அந்தக் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றி என்பதால், அந்தக் கட்சியினரால் ராகுல் காந்தி பாராட்டப்பட்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், பிரதமர் நரேந்திர மோடியின் தவறான , மோசமான நிர்வாகத்தை மக்கள் மிக நீண்டகாலமாகப் பொறுத்திருந்தனர். இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் மத்திய அரசு மீதான மக்களின் வெறுப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவினர், சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தனிப்பட்ட ரீதியான அவமதிப்பு பரப்புகளை மேற்கொண்டனர். இதை மக்கள் தாங்கிக்கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் வெற்றி மட்டுமல்ல, கட்சித் தலைமையின் வெற்றியும் கூட.
இந்த வெற்றி மூலம் 2019-ம் ஆண்டு மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி பிரதமராக உருவாகுவார் என்பதைத் தெரிவிக்கிறது. ராகுல் காந்தி கடினமாக உழைக்கும் விதம், பொறுமை ஆகியவற்றின் பலன் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளது.
தலைமைப்பண்புகளுக்கு உரிய அனைத்து விதமான தேர்வுகளிலும் ராகுல் காந்தி பாஸாகிவிட்டார். மக்கள் பிரதமர் நரேந்திர மோடியைக் காட்டிலும் சிறந்த தலைவராகவே ராகுல் காந்தியை பார்க்கிறார்கள். நரேந்திர மோடிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ராகுல் காந்தி வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வழிநடத்தியுள்ளார்.
இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT